Published : 24 Aug 2017 10:02 AM
Last Updated : 24 Aug 2017 10:02 AM

சீனாவை விமர்சித்ததால் இலங்கை நீதித் துறை அமைச்சர்விஜயதாச ராஜபக்சே நீக்கம்: அதிபர் சிறிசேனா நடவடிக்கை

சீனாவுடன் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டதை விமர்சித்த இலங்கை நீதித் துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அம்பன்தொடா பகுதியில் துறைமுகம் அமைக்க சீனா ஏராளமான நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் வழங்கி உள்ளது. துறைமுகம் அமைப்பதற்கு சீனா அளித்த கடனைத் திருப்பி செலுத்துவதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து துறைமுகப் பங்குகளை விற்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை சீனாவுக்கு விற்க இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இலங்கை அரசின் நடவடிக்கையை நீதித் துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அரசின் பல்வேறு கொள்கைகளையும் அவர் அவ்வப்போது விமர்சித்து வந்தார்.

இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாசவை நீக்க வேண்டும் என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியினர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் விஜயதாச ராஜபக்சேவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.- ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x