Published : 24 Aug 2017 09:58 AM
Last Updated : 24 Aug 2017 09:58 AM
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளை வேரறுப்பதற்காக அந்த நாட்டுக்கு தூதரக ரீதியில் உதவ தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் இனியும் அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 தினங்களுக்கு முன்பு எச்சரித்தார்.
இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது:
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அந்த நாட்டுக்கு தேவையான உதவியை தூதரக ரீதியாக செய்ய ஐ.நா.பொதுச் செயலாளர் தயாராக உள்ளார். ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. விரும்புகிறது.
இந்த முயற்சிக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்யும் என்று பொதுச் செயலாளர் குத்தேரஸ் நம்புகிறார். இத்தகைய உதவியை அந்த நாட்டில் உள்ள ஐ.நா.தூதரகம் மூலம் செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு ஸ்டெபானி துஜாரிக் தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, “தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித்தால், நேச நாடுகள் (நேட்டோ) அல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் இழக்க நேரிடும்.
அந்த நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறும்போது, “தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT