Published : 28 Jul 2017 09:53 AM
Last Updated : 28 Jul 2017 09:53 AM
இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்தேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘மைனிச்சி ஷிம்புன்’ என்ற ஜப்பான் நாளேட்டுக்கு முஷாரப் பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் கூறும்போது, “2001-ல் இந்திய நாடாளுமன்றம் மீதான தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் 2002-ல் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்தேன்.
அப்போது இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் பொருத்திய ஏவுகணை இல்லை. என்றாலும் இரு நாடுகளும் ஓரிரு நாட்களில் அணு ஆயுதத்தை ஏவுகணையில் பொருத்திவிட முடியும். என்றாலும் ஏவுகணையில் அணு ஆயுதம் பொருத்தி தயார் நிலையில் வைக்குமாறு நான் கூறவில்லை. நாம் அணு ஆயுதம் கொண்டு தாக்கினால் இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் கடந்த 1999 அக்டோபரில் ராணுவப் புரட்சி மூலம் அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றினார். பின்னர் 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இவர் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT