Published : 29 Jul 2017 09:49 AM
Last Updated : 29 Jul 2017 09:49 AM
இ
ங்கிலாந்தைச் சேர்ந்த கென்னி ஓல்லெரென்ஷாவின் டாட்டூ உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை இவரது படத்தை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். டிரக் டிரைவரான கென்னி, தன் மார்பில் தானே ட்ரக் ஓட்டுவதுபோல டாட்டூ வரைந்துகொண்டிருக்கிறார். “இந்த வித்தியாசமான யோசனையை வழங்கியவர் டாட்டூ கலைஞர் ரிச்சர்ட் பேட்லிதான். அவரது கற்பனை வளம் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. நான் டிரைவர் என்றதும் இந்த யோசனையை எனக்குச் சொன்னார். எனக்கும் பிடித்துவிட்டது. முதல்முறை இந்த டிசைனை வரைந்திருக்கிறார். 4 மணி நேரமானது. முதல் 3 மணி நேரம் வலி தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரம் இம்சையாக இருந்தது. ஆனால் வரைந்து முடித்தவுடன் என் மகன், நான் பிரபலமாகிவிடுவேன் என்று சொன்னபோது வலியெல்லாம் பறந்துவிட்டது. அவன் சொன்னதைப் போலவே இன்று நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேன். ஃபேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என் படத்தை லைக் செய்திருக்கிறார்கள். வெளியே சென்றால் எல்லோரும் பேசுகிறார்கள், வாழ்த்துகிறார்கள், என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். என்னைப் பிரபலமாக்கிய ரிச்சர்டுக்கு நன்றி” என்கிறார் கென்னி.
அடடே, ரசனையான டாட்டூ!
ஆ
ர்மீனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, Volterman Smart Wallet என்ற பாதுகாப்பான பர்ஸை உருவாக்கியிருக்கிறது. இதுவரை உலகத்திலிருக்கும் பர்ஸுகளிலேயே இதுதான் மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள். இந்த பர்ஸுக்குள் அலாரம், ஜிபிஎஸ், கேமரா போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பர்ஸுக்கான அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பர்ஸை எங்காவது தவறவிட்டுவிட்டால் சில நிமிடங்களில் போனில் அலாரம் அடிக்கும். பர்ஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தைக் காட்டும். எடுத்தவர் பர்ஸைப் பிரித்தால் கேமரா மூலம் அவரது முகம் படம் பிடிக்கப்பட்டு, ஸ்மார்ட்போனுக்கு வந்துசேரும். மிகக் குறைந்த நேரத்தில் பர்ஸ் எடுத்தவரைப் பிடித்துவிடலாம். ஸ்மார்ட்போனும் பர்ஸும் இணைந்து வேலை செய்கின்றன. ஸ்மார்ட்போனை எங்காவது மறந்து வைத்துவிட்டால், பர்ஸ் அலாரம் அடித்து உங்களுக்கு போன் குறித்து நினைவூட்டும்! உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஜிபிஎஸ் உதவியுடன் பர்ஸைக் கண்டுபிடித்துவிட முடியும். Radio frequency identification தொழில்நுட்பம் திருடரைக் காட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கடன் அட்டைகள், பாஸ்போர்ட் போன்றவற்றுக்கான கவர்களும் இதே தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார்கள். “உலகத்தில் பர்ஸ் திருட்டுதான் அதிகம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்து, மூன்று ஆண்டுகளாக வேலை செய்தோம். இன்று அதைச் சாதித்து விட்டோம். பர்ஸ் திருடுபவரின் போட்டோவே நம் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும், இருக்கும் இடத்தையும் காட்டிவிடும். நாமே நேரில் சென்று பர்ஸை வாங்கிவிடலாம். அலைச்சல் இல்லை. பதற்றம் இல்லை. பாஸ்போர்ட் கவர், கார்ட் ஹோல்டர் விலை சற்றுக் குறைவாகவும் பர்ஸ் விலை அதிகமாகவும் வைத்திருக்கிறோம். 12 ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு பர்ஸ் வாங்கிவிட முடியும்” என்கிறார் நிறுவனர் ஆஸாட் டோவ்மாஸ்யன்.
திருடரைக் காட்டிக் கொடுக்கும் பர்ஸ்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT