Last Updated : 28 Jul, 2017 09:53 AM

 

Published : 28 Jul 2017 09:53 AM
Last Updated : 28 Jul 2017 09:53 AM

சீன பாதுகாப்பு அலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை

சிக்கிம் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை நேற்று சந்தித்துப் பேசினார்.

கடந்த மாதம் சிக்கிம் மாநில எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி சாலை போட முயன்றது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளை (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா) சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் இரண்டு நாள் கூட்டம் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே, அஜித் தோவல் சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது சிக்கிம் எல்லையில் நிலவும் பிரச்சினை தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் யாங் ஜீச்சி தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தனர்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x