Published : 11 Jun 2016 10:22 AM
Last Updated : 11 Jun 2016 10:22 AM

உலக மசாலா: காஃபியோடு எழுப்பும் அலாரம்!

அலாரம் அடித்தால் பெரும்பாலானவர்களுக்குப் பிடிப்ப தில்லை. அதே அலாரம் காபி நறுமணத்துடன் உங்களை எழுப்பினால், அந்த நாளே மகிழ்ச்சியாக மாறிவிடாதா என்ன! பாரிசியர் அலாரம் கடிகாரம் காபியுடன் உங்களை எழுப்பக் காத்திருக்கிறது. காபி, தேநீர் இரண்டையும் இதன் மூலம் பெற முடியும். காலை எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று அலாரம் வைத்துவிட வேண்டும்.

பெரிய குடுவையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் புனலில் காபியோ, தேயிலையோ போட்டுவிட வேண்டும். புனலுக்கு அடியில் கோப்பையை வைத்துவிட வேண்டும். அதிகாலை குறித்த நேரத்தில் கருவி இயங்க ஆரம்பிக்கும். குடுவையில் உள்ள நீர் கொதித்து, குழாய் வழியே புனலுக்குச் செல்லும்.

புனலில் உள்ள காபித்தூளில் இருந்து சாறு கோப்பைக்குள் இறங்கும். உடனே மணி அடிக்கும். எழுந்தவுடன் சர்க்கரை சேர்த்து, சூடாக காபி குடிக்க வேண்டியதுதான். இந்தக் கருவியைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிகவும் எளிமையானது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆஹா! ரியல் பெட் காபி!

கடந்த ஓராண்டில் சீனாவில் உள்ள 11 இளைஞர்கள் தங்க ளுடைய காதலி காணாமல் போயிருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். 11 பேரும் தங்கள் காதலி கருவுற்ற பிறகே ஏராளமான பணத்துடன் காணாமல் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். ஹுயையாங் பகுதியில் வசிக்கும் வாங், ’’நானும் என் காதலியும் நெருங்கிப் பழகி வந்தோம். திடீரென்று ஒருநாள் குழந்தை உண்டாகிவிட்டது என்று கூறினாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். விமரிசையாகத் திருமணம் நடந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு அவளைக் காணவில்லை. வீட்டில் இருந்த பணம், நகைகள், திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருள்களையும் காணவில்லை. எனக்குப் பொருளோ, பணமோ முக்கியமில்லை. என் மனைவிதான் முக்கியம் என்று காவல்துறையில் புகார் அளித்தேன்.

இன்னொரு இளைஞரும் இப்படி ஒரு புகாரோடு அங்கே வந்தார். என்னைப் போலவே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி, நட்பு காதலாகி, குழந்தை உண்டாகி, திருமணம் முடிந்த பிறகு காணாமல் போயிருக்கிறார் அவர் மனைவி. நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணைத் தேடினோம். இறுதியில் அவள் இருப்பிடம் அறிந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நுழைந்து பார்த்தோம். விக், பெண்கள் ஆடை எல்லாம் ஒரு பெட்டியில் இருந்தன. எங்களை ஏமாற்றியது ஒரு ஆண் என்பதை அறிந்தவுடன் எங்கள் கோபம் பல மடங்காகிவிட்டது. நீண்ட விசாரணையில் எங்கள் 11 பேரையும் இவன்தான் ஏமாற்றியிருக்கிறான் என்பது உறுதியானது. எங்களில் ஒரே ஒருவர்தான் தன்னை ஏமாற்றியது பெண் அல்ல என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்!’’ என்கிறார்.

ஓர் ஆணை, பெண் என்று நம்பும் அப்பாவிகளா நீங்கள்!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள உணவுத் தொழிற் சாலையில் மிகுந்த பசியோடு நுழைந்தது ஒரு சீகல் பறவை. அங்கே பெரிய வாளியில் டிக்கா மசாலா சேர்த்து ஊறவைக்கப்பட்டிருந்தது கோழி இறைச்சி. பசியிலிருந்த சீகல், இறைச்சியைப் பிடித்து வேகமாக இழுத்தது. ஆனால் இறைச்சி வாய்க்கு வருவதற்குள், தானே மசாலா வாளிக்குள் விழுந்துவிட்டது. இப்படியும் அப்படியும் புரண்டதில் வெள்ளை சீகல் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த சீகலாக உருமாறிவிட்டது. ஊழியர்கள் உடனே சீகலைத் தூக்கி, நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்தனர்.

ஆனாலும் இயல்பான சீகலின் வண்ணம் கிடைக்கவில்லை. உடனே விலங்குகள் மருத்துவமனைக்கு சீகலை அனுப்பி வைத்தனர். தற்போது முழுவதுமாகக் குணமடைந்துவிட்டது. ஆனாலும் மசாலாவின் வாசனை மட்டும் அதன் உடலில் இருந்து வந்துகொண்டே இருக்கிறது. ‘‘சுத்தம் செய்ததிலும் சிகிச்சை அளித்ததிலும் உடலில் உள்ள தண்ணீர்ப் புகாத பசை காணாமல் போய்விட்டது. அதனால் கடல் பறவையான சீகலை இன்னும் சில காலம் மருத்துவமனையிலேயே வைத்திருக்கப் போகிறோம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

மசாலாவுக்குள் தானே விழுந்த அசட்டுப் பறவை!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x