Published : 12 Jun 2016 11:16 AM
Last Updated : 12 Jun 2016 11:16 AM
ஆப்கானிஸ்தானில் தெரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆப்கன் ராணுவத்துக்கு உதவு வதற்காக அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவக் குழுவின் தளபதி ஜெனரல் ஜான் நிக்கல்சன் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஓல்சன் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் ரஹீல் ஷெரீபை இஸ்லாமாபத்தில் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆப்கானில்தானில் பதுங்கி உள்ள தெரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் மற்றும் அதன் தலைவர் முல்லா பசுலுல்லா மீது வான் வழி தாக்குதல் நடத்துமாறு ரஹீல் ஷெரீப் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். மேலும் எதிரி நாடுகளின் உளவு அமைப்புகள் (ரா மற்றும் என்டிஎஸ்) தீவிரவாதத்தை தூண்டி விடுவதை அனுமதிக்க மாட்டோம் என்ற பாகிஸ்தானின் தீர்மானத்தையும் மீண்டும் உறுதிபட தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில், கடந்த மே 21-ம் தேதி அமெரிக்காவின் சிஐஏ நடத்திய வான் வழி தாக்குதலில் ஆப்கன் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் இந்த செயல் பாகிஸ்தான் இறையாண்மையை மீறியது என்ற கவலையை ரஹீல் ஷெரீப் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT