Published : 20 Jan 2016 09:37 AM
Last Updated : 20 Jan 2016 09:37 AM
ஜப்பானில் வாழ்ந்து வந்த உலகின் அதிக வயதான முதியவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
உலகின் அதிக வயதான முதியவர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெருமை பெற்றவர் யஷுதரோ கொய்டே (112). ஜப்பானின் சைதமா மாகாணத்தில் வாழ்ந்து வந்த 112 வயது சகாரி மோமோய் உயிரிழந்ததை அடுத்து, அந்த பெருமை அவருக்கு சென்றது.
மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களை தன் வாழ்நாளில் கடைபிடித்ததில்லை என்றும் கவலை இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததே நீண்ட ஆயுளின் ரகசியம் என்றும் கொய்டே தெரிவித்திருந்தார். வரும் மார்ச் மாதம் 113-வது பிறந்தநாளை கொண்டாட காத்திருந்த கொய்டே வுக்கு அண்மையில் திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் நகோயா வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். மத்திய ஜப்பானின் புகுய் மாகாணத்தில் உள்ள சுருகாவில் 1903, மார்ச் மாதம் பிறந்த கொய்டே ஆண்களுக்கான தையல் நிபுணராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் முதுமை காரணமாக மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பி, உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT