Published : 18 Jun 2016 10:22 AM
Last Updated : 18 Jun 2016 10:22 AM

ஐ.எஸ்.ஸிடம் இருந்து பலுஜா நகரம் மீட்பு

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பலுஜா நகரை இராக் ராணுவம் நேற்று மீட்டது. எனினும் அந்த நகரின் புறநகர்ப் பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றையும் மீட்க கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இராக், சிரியாவில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர். அவர்களுக்கு எதிராக இராக் ராணுவம், குர்து படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதன்காரணமாக அண்மைக் காலமாக இராக் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதி கள் கட்டுப்பாட்டில் இருந்த ஜன்குரா நகரை இராக் படைகள் மீட்டன.

இதைத் தொடர்ந்து அதே மாகாணத்தில் உள்ள பலுஜா நகரையும் மீட்க இராக் படைகள் தீவிரமாக போரிட்டன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் போர் காரணமாக நேற்று பலுஜா நகருக்குள் இராக் ராணுவ வீரர்கள் நுழைந்தனர்.

அந்த நகர அரசு அலுவலகத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் தலைமை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தனர். அதனை இராக் வீரர்கள் கைப்பற்றினர்.

இதுகுறித்து இராக் போலீஸ் படைப்பிரிவு தலைவர் ராத் கூறியதாவது: பலுஜா நகரின் பெரும்பான்மை பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். தற்போது அவர்கள் நகரின் புறநகர்ப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்தும் அவர்களை விரட்டியடிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பலுஜா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். சுமார் 2 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு அந்த நகரம் தற்போது மீண்டும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x