Last Updated : 17 May, 2015 09:09 AM

 

Published : 17 May 2015 09:09 AM
Last Updated : 17 May 2015 09:09 AM

எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸிக்கு மரண தண்டனை

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. எகிப்தில் சுமார் 30 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி 2011-ம் ஆண்டில் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து 2012-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முகமது மோர்ஸி அதிபரானார்.

ஆனால் அவரது ஆட்சிக்கு எதிராகப் புரட்சி வெடித்தது. 2013 ஜூலையில் ராணுவ நடவடிக்கை மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் கடந்த 2014 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி அல்-சிசி வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் முன்னாள் அதிபர் மோர்ஸி, அவர் சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை வேகமாக நடைபெற்றன. ராணுவத்துக்கு எதிரான வன்முறையில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரலில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 2011-ம் ஆண்டில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேர் சிறையை உடைத்து வெளியேறியது தொடர்பான வழக்கில் நேற்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கெய்ரோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு மேல்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மேல் நீதிமன்றம் பரிசீலனை செய்து ஜூன் 2-ம் தேதி மரண தண்டனையை உறுதி செய்யும் என்று தெரிகிறது. எனினும் இந்த வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து மோர்ஸி மேல்முறையீடு செய்ய முடியும் என்று எகிப்து சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x