Published : 18 Jul 2016 01:58 PM
Last Updated : 18 Jul 2016 01:58 PM
நான் அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார்.
டிரம்ப் தனது பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார். முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்படும் என அவர் கூறிய கருத்து சர்வதேச அளவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
'வீரர்களை விட வியூகம் முக்கியம்'
இந்நிலையில், சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "நம்மை அழித்தொழிக்க நினைக்கும் மக்கள் இங்கு இருக்கின்றனர். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுப்பேன். ஆம், இது அவர்களுக்கு எதிரான போர். ஆனால் அந்தப் போரில் வெகுசில அமெரிக்க வீரர்களே நேரடியாகக் களத்தில் இறக்கப்படுவார்கள் அவர்களைக் கொண்டே ஐ.எஸ். இயக்கத்தை வெற்றி காணும் வகையில் உளவுப் பிரிவுகள் செயல்படும்.
அமெரிக்காவுக்கு இப்போது மிகத் தேவையானது சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளே. குறைவான வீரர்களுடன் சிறந்த வியூகம் வகுத்து ஐ.எஸ். அழிக்கப்படும். ஐ.எஸ்.-க்கு எதிரான போரில் நேட்டோ படைகள் பயன்படுத்தப்படும். ஏனெனில் நேட்டோ படைகளுக்கு தேவைக்கு அதிகமாகவே அமெரிக்கா உதவி செய்துள்ளது.
'அமெரிக்காவுக்குத் தேவையான தலைமை டிரம்ப்'
டிரம்பை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், "அமெரிக்காவுக்கு தேவையான தலைமை டிரம்ப். நமது எதிரிகளை வீழ்த்துவோம் என்ற சூளுரையோடு அந்தத் தலைமை தனது பயணத்தை தொடங்குகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT