Published : 13 May 2017 01:09 PM
Last Updated : 13 May 2017 01:09 PM
சீனாவில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நொடிப் பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சீனாவின் ஃபுஜைன் மாகாணத்திலுள்ள சியான்யூ ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2.50 மணியளவில், இளம்பெண் ஒருவர் மன அழுத்தத்துடனும், சோர்வுடனும் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததை ரயில்வே அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
அப்பெண்ணிடம் அதிகாரிகள், அவர் செல்லும் ரயில் எண் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் அதற்கு பதிலளிக்காமல் ரயில் வரும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனை சியான்யூ ரயில் நிலையத்தில் ஊழியராகவுள்ள வெங் ஜியான்சாங் கவனித்து வந்திருக்கிறார்.
அப்போது அதிவிரைவு ரயில் D6529 வேகமாக வந்து கொண்டிருக்கும்போது, அப்பெண் அந்த ரயிலை நோக்கி நடைபாதையிலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு சற்று பின்னால் நின்று கொண்டிருந்த வெங் விரைந்து சென்று அப்பெண்ணை பிடித்து இழுந்து காப்பாற்றியுள்ளார். இந்தக் காட்சி அந்த ரயில்வே நிலையத்திலுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
அதன்பின் தற்கொலைக்கு முயன்ற பெண் அவரது குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அப்பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அப்பெண்ணைக் காப்பாற்றிய வெங்கின் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது.
வெங் ஜியான்சாங்கின் இந்த துணிச்சலான செயலுக்கு 6,000 யுவான் பரிசுத் தொகை வழங்கி மாகாண அரசு அவரைப் பாராட்டியுள்ளது. பல்வேறு தரப்புகளிடமிருந்து வெங்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT