Published : 22 Sep 2016 04:36 PM
Last Updated : 22 Sep 2016 04:36 PM
பாகிஸ்தான் உடனான நட்புறவை பிரிக்க முடியாது என்று சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது, சீன - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து சீனாவின் அதிகாரபூர்வ அரசு ஊடகமான சின்குவா வெளியிட்ட தகவலில், "இந்தச் சந்திப்பில் சீன பிரதமர் லி கெகியாங், "சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒன்றுக்கொன்று பரஸ்பர உதவி செய்துகொள்ளும் நாடுகள். சீனா - பாகிஸ்தான் உறவை பிரிக்க முடியாது. பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் சீனா உறுதுணையாய் இருக்கும்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா ஆதரிக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் விரிசலை சரிசெய்ய சீனா உதவும்" என்று அவர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தச் சந்திப்பு குறித்து பாகிஸ்தானின் முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கொண்டுள்ள நிலைப்பாட்டை மற்ற நாடுகளைவிட சீனா அதிகம் புரிந்து வைத்துள்ளது. காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் சீனா ஆதரவளிக்கும்" என சீனப் பிரதமர் லி கெகியாங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா - பாகிஸ்தான் இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பில், காஷ்மீரின் யூரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து எந்தவித அம்சமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT