Published : 10 Feb 2017 07:40 PM
Last Updated : 10 Feb 2017 07:40 PM
இரான் தனது 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியை ‘அமெரிக்காவுக்கு மரணம்’ உள்ளிட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்களுடன் கொண்டாடியது.
தெஹ்ரானில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே, இஸ்ரேலிய பிரதமர் நேதன்யஹூ ஆகியோர் படங்களை வைத்துக் கொண்டு, “சாத்தானிய முக்கோணத்துக்கு மரணம்” என்று கோஷமிட்டனர்.
அதிபர் ஹசன் ரூஹானி, ‘அமெரிக்காவின் போர் ஆக்ரோஷத்தை இரான் பொறுத்துக் கொள்ளாது’ என்றார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியில் இரான் அதிபர் ரூஹானி பேசும் போது, “வெள்ளை மாளிகையின் புதிய ஆட்சியாளர்களின் தவறான கருத்துக்களுக்கு எதிராக இந்தக் கூட்டம் திரண்டுள்ளது. இரானிய மக்களை மரியாதையுடனும் கவுரவத்துடனும் இனி அமெரிக்கா பேச வேண்டும் என்பதை மக்கள் இன்றைய தினம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இரான் அரசு தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஆகியோரது உருவபொம்மைகள் எரிக்கப்படுவதையும், “அமெரிக்காவுக்கு மரணம்” என்றும் கோஷங்கள் எழுப்பிய காட்சிகளை ஒளிபரப்பியது.
மேலும் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயமில்லை என்பதை மக்கள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரான் எதற்கும் அஞ்சாது போர் ஆக்ரோஷ அமெரிக்க மனோநிலையை எதிர்த்து நிற்போம் என்று ரூஹானி தெரிவித்தார்.
இரான் அதிபர் மேலும் கூறியபோது, அயல்நாட்டினரை அண்டியிருக்கும் நிலையிலிருந்து விடுதலையை அறிவ்த்த புரட்சியே 1979 இஸ்லாமிய புரட்சியாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT