Published : 20 Sep 2018 11:00 AM
Last Updated : 20 Sep 2018 11:00 AM

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு இடைத்தரகர் திடீர் மாயம்: நீதிமன்ற உத்தரவு கிடைத்தும் இந்தியா அழைத்து வர முடியாத அவலம்

 நாட்டையே உலுக்கிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட மைக்கேல் கிறிஸ்டியனை இந்தியாவிடம் ஒப்படைக்க துபாய் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் சிபிஐயின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடுகடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதனால் பல ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் துபாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களில் மைக்கேல் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவரது வழக்கிறஞர் அமல் அல்சுபாயை தி இந்து (ஆங்கிலம்) சார்பில் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் அவர் எங்காவது பதுங்கி இருக்கலாம். அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அவரை ஐக்கிய அரபு அமீரக போலீஸாரும் தேடி வருகின்றனர்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x