Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 15-க்கும் டிசம்பர் 7-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது 5 ஆண்டு பதவிக் காலம் 2020 ஜனவரி 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த 30-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அப்போது, இலங்கை அதிபர் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் என கூறியிருந்தார். அதேநேரம் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்ச்சியில் இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேஷபிரியா பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “சட்டப்படி அதிபரின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற வேண்டும். இதன்படி, வரும் நவம்பர் 15-க்கும் டிசம்பர் 7-க்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்” என்றார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT