Last Updated : 09 Mar, 2018 11:08 AM

 

Published : 09 Mar 2018 11:08 AM
Last Updated : 09 Mar 2018 11:08 AM

வடகொரிய அதிபர் கிம்மை சந்திக்கிறார் ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - ஐ சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தயராக இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் தொடர் ஆணுஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது தொடர் விமர்சனங்களையும், பொருளாதாரத் தடைகளையும் விதித்த அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றம் உலக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

வட கொரிய அதிபராக கிம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திங்கட்கிழமையன்று தென் கொரிய பிரதிநிதிகள் கிம்மை வடகொரியாவில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து கிம், "தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத போகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்பிடம் தென்கொரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங் கூறும்போது, " கிம் அணு ஆயுதங்களை நீக்கம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை ட்ரம்பிடம் தெரிவித்தோம். வடகொரியா அதிபர் கிம்மை சந்திப்பது குறித்து நாங்கள் டிரம்பிடம் ஆலோசித்தோம்.

கிம்மை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் கூறியுள்ளார். வரும் மே மாதம் அமெரிக்க அதிபர் டரம்ப் கிம்மை சந்திக்கிறார்.

ட்ரம்பை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கிம் தெரிவித்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,"அணு ஆயுதங்களை நீக்கம் செய்வது பற்றி  தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில் வடகொரியா எந்தவித ஏவுகணை சோதனைகளையும் நடத்தாது.

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்படும் வரை  அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்.  கிம்மை சந்திப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவும், அணுஆயுத சோதனைகளும்

முன்னதாக, கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் - கிம் இடையே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x