Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM
‘‘வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பில் பலன் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் திருப்பம் ஏற்பட்டது.
தென் கொரியாவின் அழைப்பை ஏற்று வடகொரிய பிரதிநிதிகள் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் மூன், வடகொரியாவுக்கு பயணம் செல்ல உள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஓரளவு தணிந்தது. அதன் அடுத்தகட்டமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நேரில் சந்தித்து, அணுஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிக் சாக்கோனை ஆதரித்து, அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது ட்ரம்ப் கூறியதாவது:
வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகலாம். அல்லது உலக நாடுகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒப்பந்தங்கள் ஏற்படலாம். இருவரும் சந்திக்கும் போது எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நான் உணர்ந்தால் சிறிது நேரத்தில் எழுந்து வந்துவிடலாம். அல்லது இருவரும் அமர்ந்து தீர்வு குறித்து பேசலாம். வடகொரியா அமைதியை ஏற்படுத்த விரும்பும் என்று நம்புகிறேன்.
இருவரும் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
கிம்மை சந்திக்கும் இடம், நேரம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும் மே மாத இறுதியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT