Published : 26 May 2019 06:26 PM
Last Updated : 26 May 2019 06:26 PM
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மக்களின் நலனுக்காக இணைந்து ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இம்ரான் கான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் இம்ரான் கான் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றவுடன், பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், "பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். தெற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி, செழிப்பு ஏற்பட முன்னெடுத்துச் செயல்படுவோம். இரு நாட்டு மக்களின் நலன்களுக்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார் " என்று தெரிவித்தார்.
கிரிகிஸ்தானில் உள்ள பிஷ்செக் நகரில் அடுத்த மாதம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் பிரமதர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார்கள். அப்போது இரு தலைவர்களும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மிகமோசடைந்து.
இந்த சூழலில்தான் இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தல் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஏனென்றால், டெல்லியில் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசுமூலம்தான் இந்தியா, பாகிஸ்தான் உறவு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதால் தீவிரமாக உற்றுநோக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில் " இந்தியாவில் மீண்டும் பிரதமராக மோடி வந்தால்தான் இந்தியாவுடனான பல்வேறு பிரச்சினைகள், காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றைப் பேசித் தீர்க்க முடியும்" என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே தேர்தல் முடிவுகளுக்கு ஒருநாள் முன் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பமாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய அரசு அமைந்தவுடன் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT