Published : 02 Mar 2019 01:39 PM
Last Updated : 02 Mar 2019 01:39 PM

பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களில் சேவை தொடங்கியது

விமானி அபிநந்தனின் விடுதலைக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்த நிலையில், பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்களில் சேவை தொடங்கியது.

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, இந்திய விமானப் படை போர் விமானங்கள் அந்த முகாம் மீது குண்டுகளை வீசி அழித்தன. இதில் சுமார் 350 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இந்தத் தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியத் தரப்பில் ஜம்மு, ஸ்ரீநகர், லே, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், இந்த விமான நிலையங்களில் இருந்து பயணிகள் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பைசாலாபாத், சியோல்கோட் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் இரு புறமும் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதலின்போது பிடித்த இந்திய விமானி அபிநந்தனை நேற்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று மாலையே 4 விமான நிலையங்களில் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. கராச்சி சர்வதேச விமான நிலையம், பெஷாவர், குவே-ட்டா மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களும் தனது சேவைகளைத் தொடங்கியுள்ளன. சில கட்டுப்பாடுகளுடன் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் லாகூட், சியால்கோட், முல்தான் உள்ளிட்ட விமான நிலையங்கள் மார்ச் 4-ம் தேதி மதியம் 1 மணிக்குத் திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x