Published : 22 Jan 2019 11:06 AM
Last Updated : 22 Jan 2019 11:06 AM

பாகிஸ்தானில் லாரி மோதி பேருந்து எரிந்ததில் 24 பேர் உயிரிழப்பு

தெற்கு பாகிஸ்தானில் நேற்று மாலை (திங்கள்கிழமை) நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பஞ்ச்கூர் பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்து லாஸ்பெல்லா மாவட்டத்தைக் கடந்துசென்றுகொண்டிருந்தபோது எதிரே தாறுமாறாக வந்த லாரி மோதியது. இதனால் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விபத்து நடந்த லாஸ்பெல்லா மாவட்டப் பகுதியின் உள்ளூர் நிர்வாகத் தலைவர் ஏஎப்பியிடம் தெரிவித்தபோது, ''வாகனத்திலிருந்து இதுவரை 24 உடல்களை மீட்டெடுத்தோம். அனைத்து உடல்களும் எரிந்துவிட்டிருந்தன'' என்றார்.

மூத்த காவல்துறை அதிகாரி அகா ரம்ஸான் அலி கூறுகையில், ''பேருந்தின் உள்ளே மிகவும் சூடாக உள்ளது, சற்று மெதுவாக உடல்களை வெளியே எடுத்து வரமுடிகிறது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றார்.

பாகிஸ்தானில் ஆபத்தான போக்குவரத்து விபத்துகள் மிகவும் சாதாரணமாக நடக்கின்றன, பொறுப்பற்ற ஓட்டுநர் மற்றும் சாலைகளின் மோசமான நிலை காரணமாக இவ்விபத்துகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள்,விபத்துகளில் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x