Published : 24 Aug 2014 12:57 PM
Last Updated : 24 Aug 2014 12:57 PM

அணுசக்தி முகமை ஆய்வுக்கு ஈரான் அனுமதி மறுப்பு

ஈரான் நாட்டின் பார்சின் ராணுவத் தளத்தில் சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) ஆய்வு நடத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித் துள்ளது.

ஈரான் அணுஆயுதங்களைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக் கப்பட்டன.

இந்நிலையில் ஈரானின் அணுஉலை களில் ஐ.ஏ.இ.ஏ. ஆய்வு நடத்த அந்த நாட்டு அரசு கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதார தடைகள் தளர்த் தப்பட்டன.

கடந்த நவம்பரில் கையெழுத்தான ஜெனீவா ஒப்பந்தப்படி ஈரானின் பல்வேறு அணு உலைகளில் அணு சக்தி முகமை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தலைநகர் தெஹ்ரான் அருகேயுள்ள பார்சின் ராணுவத் தளத்திலும் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஏ.இ.ஏ. கோரியது.

ஆனால் பார்சின் ராணுவ தளத்தில் ஆய்வு நடத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூசைன் டேகன் கூறியதாவது: 2005-ம் ஆண்டிலேயே பார்சின் ராணுவ தளத்தில் ஐ.ஏ.இ.ஏ. ஆய்வு நடத்தியுள்ளது. அப்போது அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியதில் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது புதிதாக அங்கு ஆய்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு அரசு அனுமதி அளிக்காது என்று தெரிவித்தார்.

ஐ.ஏ.இ.ஏ. அமைப்பின் தலைவர் யுகியா அமோனா அண்மையில் ஈரானுக்கு சென்றிருந்தார். அப்போது பேட்டியளித்த அவர், பார்சின் ராணுவ தளத்தை ஆய்வு செய்தால்தான் எங்களின் பணி நிறைவடையும். அதன் பின்னர்தான் எங்களால் உறுதியான முடிவுக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x