Published : 12 Jun 2018 12:36 PM
Last Updated : 12 Jun 2018 12:36 PM

வடகொரிய அதிபர் கிம்முக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ‘ரெடிமேட் டாய்லட்’ கொண்டுவந்த ரகசியம் என்ன?

சிங்கப்பூரில் நடந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

குறிப்பாக வடகொரிய அரசு அதிபர் கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் டாய்லட் எடுத்து வந்து அதைத்தான் பயன்படுத்தினார். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஐநாவின் பொருளாதார தடைக்கும் எச்சரிக்கைக்கும் கட்டுப்படாமலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கும் பணியாமலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனையும், ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்தி வந்தது.

இதனால் கொரிய பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. தென்கொரியா, ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்து வடகொரியாவுக்கு மிரட்டல் விடுத்து, அணு ஆயுதச் சோதனையை நிறுத்த வலியுறுத்தியது. இதனால், அமெரி்கக அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவியது.

இதையடுத்து சீனாவின் தலையீட்டால், வடகொரியா அமைதி அடைந்து, தென் கொரியாவுடன் சுமுகமான உறவுக்கு முன்வந்தது. இதன் ஒருபடி முன்னேற்றமாக வடகொரியாவில் நடந்த ஒலிம்பிக்போட்டியில் தென் கொரிய வீரர்கள் பங்கேற்றனர்.

அடுத்த கட்டமாக வார்த்தைகளில் மோதிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நேரில் சந்தித்து பேச முன்வந்தனர்.

இதன்படி, சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி இன்று நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் நடந்த இந்தச் சந்திப்புக்கு வந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங்குக்கு, அவருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது. குண்டு துளைக்காத கார், அதிபர் கிம் ஜாங் என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பேச வேண்டும், எங்கு அமரவேண்டும், எந்த அறையில் தங்க வேண்டும், அறையில் எத்தனை பேர் தங்க வேண்டும் உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பில் உச்சக்கட்ட சுவாரஸ்யம் என்னவென்றால், வடகொரியா அதிபர் சொந்தமாக ‘டாய்லட்’ கொண்டு வந்திருந்ததுதான். அமெரிக்கா மீது இன்னும் முழுமையான நம்பிக்கை வராத காரணத்தினால் என்னமோ, வடகொரியா அரசு அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்த சொந்தமாக ரெடிமேட் டாய்லட் கொண்டு வரப்பட்டது.

நட்சத்திர ஹோட்டலில் ‘டாய்லட்’ இருந்த போதிலும் அதை அதிபர் கிம் ஜாங் பயன்படுத்தவில்லை, அதிபர் கிம் தான் கொண்டு வந்த டாய்லட்டைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று தென் கொரிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். கடந்த 32 ஆண்டுகளில் வடகொரியாவின் அதிபர்  வேற்று நாட்டு மாநாட்டில் பங்கேற்கச் செல்வது இதுதான் முதல் முறையாகும். ஆதலால், எதிரிகள் எந்தவிதத்திலும் எதிரிகளிடத்தில் தன்னைப்பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

ஆதலால், எதிரிகள் எந்தவிதத்திலும் அதிபர் கிம் ஜாங்கை தாக்கலாம், எதிர்காலத்தில் தாக்குவதற்கான திட்டமிடலை செய்யலாம் என்பதால், தன்னைப் பற்றிய எந்தவிதமான ரகசியமும் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் அளிப்பார்.

அதன் காரணமாகவே, தான் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேறும், சிறுநீர், மலம் ஆகியவற்றைக் கூட எதிரிகள் கைப்பற்றி, அதன் மூலம் தனது உடல்நிலை, உடலில் உள்ள குறைபாடுகள், திசுக்கள், பாக்டீரியாக்கள், என்னமாதிரியான உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்து விடலாம் என்பதால், கழிப்பறையைக் கூட அதிபர் கிம் உடன் கொண்டு சென்றுள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் தன்னுடைய நாட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்து பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார். இரு டீகாய் விமானங்கள், தனிக் கப்பலில் கிம்முக்கு தேவையான உணவுகள், பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்டோசா தீவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அதிபர் கிம் தங்கினாலும் கூட அங்கிருக்கும் உணவுகளைச் சாப்பிடாமல் தான் கொண்டுவந்திருக்கும் உணவுகளையே சாப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்பின் சந்திப்புக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுகளை மட்டுமே அதிபர் கிம் சாப்பிட ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், தனது உடலில் இருந்து வெளியேறும் கழிப்பொருட்கள் சிறுநீர், மலம் ஆகியவை கூட எதிரிகள் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கிம் கவனமாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே அதிபர் கிம் சொந்தமாக டாய்லெட் கொண்டு வந்துள்ளார்.

உடலின் கழிவுப்பொருட்களில் இருந்து குறிப்பாக சிறுநீர், மலம் ஆகியவற்றில் இருந்து ஒருமனிதனின் உணவுப்பழக்கம், உடலில் உள்ள குறைபாடுகள், ரத்தத்தில் சர்க்கரை, உடல் பருமனுக்கான காரணம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சமீபத்தில், உடலில் ஏற்பட்டிருந்த பிரச்சினை, எப்போது சாப்பிட்டார், உணவுப்பழக்கம், புற்றுநோய், குடல்நோய் உள்ளிட்ட அனைத்து விதமான விஷயங்களையும் தேர்ந்த மருத்துவர்களால் அறிந்துவிட முடியும்.

இதுபோல் அதிபர் கிம் ஜாங் உடல்நலத்தையும் எதிரிகள் அறிந்து கொண்டு அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிவிடக்கூடாது என்பதற்காகச் சொந்தமாக கழிப்பறை கொண்டுவரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x