Published : 09 May 2024 12:22 PM
Last Updated : 09 May 2024 12:22 PM

“இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி” - ரஷ்யா குற்றச்சாட்டு

மரியா ஜாகரோவா

புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில். “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது.

இந்திய தேசம் குறித்த புரிதல் மற்றும் அதன் வரலாறு குறித்து அறியாமல் அமெரிக்கா பேசி வருகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.

இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது” என்றார்.

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவின் மத சுதந்திரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து அண்மையில் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக அந்த ஆணையம் குற்றச்சாட்டு வைத்தது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலுவான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x