Published : 13 Apr 2018 08:50 AM
Last Updated : 13 Apr 2018 08:50 AM
இலங்கையில் 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திர கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எஸ்எல்பிபி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவால் பிரதமர் ரணில் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பின்போது சுதந்திர கட்சியைச் சேர்ந்த 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர்.
அந்த வகையில் ரணிலை எதிர்க்கும் கேபினட் அந்தஸ்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அறிவியல்-தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜான் செனவிரத்ன, இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உட்பட 16 அமைச்சர்கள் நேற்றுமுன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
பதவி விலகிய அனுர பிரியதர்சன யாப்பா கூறியபோது, “நாங்கள் சுதந்திர கட்சியிலேயே நீடிப்போம். மஹிந்த ராஜபக்ச கட்சிக்கு மாறமாட்டோம்”என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT