Published : 04 Apr 2018 09:39 AM
Last Updated : 04 Apr 2018 09:39 AM

மோசமான வானிலையால் விமானம் ரத்து: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து நவாஸ் ஷெரீபுக்கு விலக்கு

மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்தானதால் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியமுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மகன்கள் ஹாசன், ஹுசைன், மருமகன் முகமது சப்தர் ஆகியோர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவ்வப்போது நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி வருகிறார் நவாஸ் ஷெரீப்.

இந்த வழக்கில் நேற்று இஸ்லாமாபாதிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீபும், அவரது மகள் மரியமும் ஆஜராக இருந்தனர். இதற்காக லாகூர் விமான நிலையத்துக்கு அவர்கள் வந்தனர். அங்கு அவர்கள் செல்லவேண்டிய விமானம், மோசமான வானிலை காரணமாக புறப்பட முடியாமல் போனது.

இதையடுத்து அவர்களால் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் குவாஜா ஹாரிஸ், இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து, அவர்கள் விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரினார்.

இதையடுத்து நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஷெரீப்பின் மருமகன் சப்தர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி ஷெரீப்பை, பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஷெரீப் குடும்பம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை ஆணையத்துக்கும் உத்தரவிட்டது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x