Published : 31 Jan 2018 02:39 PM
Last Updated : 31 Jan 2018 02:39 PM
'நாம் மக்களை தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை... கட்டாயப்படுத்த போகிறோம்.' கேப்டவுன் மேயர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
ஆம், தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக விரைவில் அறியப்படும் சூழல் உருவாகியுள்ளதால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக அந்நகரில் போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. இதனால் நீர் மக்களின் தேவைக்கு ஏற்ப அளவீடு செய்தே பிறகே திறந்து விடப்படுகிறது. நாளுக்கு நாள் மக்கள் பயன்பாடுகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.
மழை மீண்டும் கேப்டவுனில் பெய்யும்வரை, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும், பிப்ரவரியில் இது 50 லிட்டராக குறைக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து பிரதான குழாய்களும் அடைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கேப்டவுனில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து அந்நகர மக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
கெடு விதித்துள்ள கேப்டவுன் அதிகாரிகள்
கேப்டவுனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், வீடுகளில் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 22-ம் தேதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும் நாள் என்று அறிவித்த அந்நகர அதிகாரிகள் தற்போது அந்தநாளை ஏப்ரல் 12-ஆக அறிவித்துள்ளனர்.
கேப்டவுனின் இந்நிலைக்கு காரணமாக, மக்கள் தொகை அதிகரிப்பையும், பருவ நிலை மாற்றத்தையும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
கட்டுரை ஆசிரியர்: பால்.பி.மர்பி
தமிழில்: இந்து குணசேகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT