Published : 25 Oct 2023 05:36 PM
Last Updated : 25 Oct 2023 05:36 PM

காசா மீதான இஸ்ரேலின் இரவு நேர தாக்குதல்களில் 80 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தகவல்

காசா நகரம் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பாதிப்பு.

காசா: காசா மீது இஸ்ரேல் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹமாஸ் தரப்பில் வெளியிட்ட தகவலில்,"நேற்று ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் மோதல் இன்னும் நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x