Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலை

நேபாளத்தில் 239 ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து 1996 முதல் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2006-ம் ஆண்டில் அவர்கள் அரசியலில் கால் பதித்தனர். கடந்த 2015-ம் ஆண்டில் மன்னராட்சி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. புதிய அரசமைப்பு சாசனம் இயற்றப்பட்டது. அதன் கீழ் நேபாளம் 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாணங்களின் பேரவைகளுக்கும் நவம்பர் 26, டிசம்பர் 7-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ்-மாதேஸி கட்சிகள் ஓரணியாகவும் நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மாவோயிஸ்ட் மையம் ஆகியவை எதிரணியாகவும் போட்டியிட்டன.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை முதல் எண்ணப்படுகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. சனிக்கிழமை நிலவரப்படி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் நேபாளி காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைத்துள்ளன.

இதேபோல 7 மாகாணங்களின் 650 தொகுதிகளுக்கான தேர்தலிலும் நேபாள கம்யூனிஸ்ட் கூட்டணியே முன்னிலையில் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 25-ம் தேதிக்குப் பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும்.

நேபாளி காங்கிரஸ் இந்தியாவுக்கு முதலிடமும் நேபாள கம்யூனிஸ்ட் சீனாவுக்கு முன்னுரிமையும் அளித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x