Published : 17 Nov 2017 09:51 AM
Last Updated : 17 Nov 2017 09:51 AM

ஆப்கானிஸ்தானில் மனிதகுண்டு வெடித்து 18 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் மனித குண்டு வெடித்து 18 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தின் ஆளுநர் அட்டா முகமது நூர். இவர் அந்த நாட்டு அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர். தற்போதைய அதிபர் அஷ்ரப் கனியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அட்டாவின் ஆதரவாளர்கள் காபூலில் நேற்று கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி கூட்டத்தில் நுழைய முற்பட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸ்காரர் அவரை தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இதில் 8 போலீஸார் உட்பட 18 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். அண்மைகாலமாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் செய்தியாளர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் மேலும் சிக்கலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 56.8 சதவீத பகுதி மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ளவற்றில் 13.2 சதவீத பகுதி தலிபான்களிடமும் 30 சதவீத பகுதி உள்ளூர் தலைவர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x