Last Updated : 23 Nov, 2017 05:41 PM

 

Published : 23 Nov 2017 05:41 PM
Last Updated : 23 Nov 2017 05:41 PM

ஜிம்பாப்வே அதிபராக தயாராகும் எம்மர்சன்

37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை நடத்திய முகாபே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஜிம்பாப்வேயின் அடுத்த அதிபராக எம்மர்சன் பதவி ஏற்க இருக்கிறார்.

கடந்த 1980-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அப்போதிலிருந்து, ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பின் (இசட்.ஏ.என்.யு) தலைவரான ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து (37 ஆண்டுகளாக) ஆட்சி செய்து வந்தார்.

இந்நிலையில் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை சமீபத்தில் அவர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவத் தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த 15-ம் தேதி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அத்துடன் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரைப் பதவி விலகுமாறு ராணுவம் வலியுறுத்தியது.

நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர். முதலில் பதவி விலக மறுத்த முகாபே, கடும் எதிர்ப்பு காரணமாக தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து துணை அதிபர் பதவியிருந்து நீக்கப்பட்ட எம்மர்சன் வெள்ளிக்கிழமை ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கிடையே எம்மர்சன் பேசும்போது, ”இது ஒரு புதிய சகாப்தம். மக்கள் பேசினார்கள்.. மக்களின் குரல்தான் கடவுளின் குரலும். எதிர்காலத்தில் தொடங்க இருக்கும் வெளிப்படையான ஜனநாயகத்துக்கு சாட்சிகளாக நாம் இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x