Published : 23 Nov 2017 10:14 AM
Last Updated : 23 Nov 2017 10:14 AM

பதவி விலகினார் ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வே புதிய அதிபராகிறார் எம்மர்சன்

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து ராபர்ட் முகாபே விலகினார். இதையடுத்து, முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வா (75) புதிய அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த 1980-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அப்போதிலிருந்து, ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பின் (இசட்.ஏ.என்.யு) தலைவரான ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து (37 ஆண்டுகளாக) ஆட்சி செய்து வந்தார்.

இந்நிலையில் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த 15-ம் தேதி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அத்துடன் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அத்துடன் பதவி விலகுமாறு ராணுவம் அவரை வலியுறுத் தியது.

இதுபோல நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர். முதலில் பதவி விலக மறுத்த முகாபே, கடும் எதிர்ப்பு காரணமாக அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முகாபே ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தனது துணை அதிபர் பதவி பறிக்கப்பட்டதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய எம்மர்சன் நாடு திரும்புகிறார். அவர் விரைவில் புதிய அதிபராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. எனினும் இது ஒரு இடைக்கால ஏற்பாடாகவே இருக்கும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x