Published : 17 Nov 2017 10:01 AM
Last Updated : 17 Nov 2017 10:01 AM

அமெரிக்கா, ஜப்பான் போர் ஒத்திகை

அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகள் இணைந்து மேற்கு பசிபிக் கடலில் 10 நாட்கள் போர் ஒத்திகையை நேற்று தொடங்கின.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அணு குண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அடுத்தடுத்து சோதனை செய்து வருகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை கடந்து சென்றது பதற்றத்தை அதிகரித்தது.

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க - தென்கொரிய கடற்படைகள் இணைந்து 4 நாட்கள் போர் ஒத்திகையை அண்மையில் நடத்தின. அதில் அமெரிக்காவின் நாசகார போர்க்கப்பல்கள் பங்கேற்றன.

இதைத் தொடர்ந்து அமெரிக்க - ஜப்பானிய கடற்படைகள் இணைந்து மேற்கு பசிபிக் கடலில் 10 நாட்கள் போர் ஒத்திகையை நேற்று தொடங்கின. இதில் அமெரிக்க கடற்படையின் 14 ஆயிரம் வீரர்களும் யுஎஸ்எஸ் ஸ்தம், சாபி, மஸ்டின் உள்ளிட்ட நாசகார போர்க்கப்பல்களும் பங்கேற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். பிலிப்பைன்ஸில் நடந்த ஆசியான் மாநாட்டில், வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார். இந்தப் பின்னணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சிறப்புத் தூதர் ஒருவர் விரைவில் வடகொரியா சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேச உள்ளார் என்று சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியபோது, ‘‘வடகொரியா அச்சுறுத்தல் விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடுகிறது. ஒருபக்கம் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது போல நடிக்கிறது. அதேநேரம் வடகொரியாவுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x