Published : 24 Nov 2017 09:45 AM
Last Updated : 24 Nov 2017 09:45 AM
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு’ தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 170 நாடுகளைச் சேர்ந்த 1500 தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். .‘அமெரிக்காவில் இருந்து மட்டும் 350 பேர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் மாநாட்டில் தலைமை உரையாற்ற உள்ளார்.
‘பெண்களுக்கு முதலிடம், அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற கருத்துருவை மையமாக வைத்து மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் சார்பில் பெண் தொழிலதிபர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்கின்றனர். தனது இந்திய பயணம் குறித்து இவாங்கா ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா, இந்தியா இணைந்து ஹைதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகின்றன. இதில் பங்கேற்க இந்தியா செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவடையும்.
இந்திய பிரதமர் மோடியை முதல்முறையாக சந்திக்க உள்ளேன். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை மீண்டும் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன். பொருளாதார வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும். புதுமையான சிந்தனைகள், தொழில் வளம் ஆகியவை வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படை ஆதாரங்கள் என்று அமெரிக்கா கருதுகிறது. ஹைதராபாத் மாநாட்டில் பெண் தொழிலதிபர்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT