Published : 16 Jun 2023 02:23 PM
Last Updated : 16 Jun 2023 02:23 PM

நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: ஆஸ்திரேலிய எம்.பி குற்றச்சாட்டு

லிடியா தோர்ப்

கான்பரா: நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப். இவர், சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை நாடாளுமன்ற அவையில் முன்வைத்திருக்கிறார்.

நாடாளுமன்ற அவையில் கண்ணீர் மல்க லிடியா பேசும்போது, “ நான் இந்த நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரான டேவிட் வானால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவர் படிக்கட்டில் தள்ளி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதே போன்ற நிகழ்வு இங்கு பலருக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பணிக்காக இதனை வெளியே கூறாமல் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்தது அவமானமான செயல், அவரைப் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

லிடியா மட்டுமல்ல இதற்கு முன்னரும் டேவின் வான் மீது பெண் எம்.பி.,க்கள் சிலர் பாலியல் குற்றச்சட்டை கூறியிருந்தனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த டேவிட் வான், லிடியா கூறுவது உண்மைக்குப் புறம்பானது; நான் உடைந்திருக்கிறேன் என்றும் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் டேவிட் வான் மீது கொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொழிலாளர் கட்சி அவரை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது,

2021 ஆம் ஆண்டு முதலே ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஐந்து வழக்குகளும் விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x