Published : 04 Jan 2023 06:14 AM
Last Updated : 04 Jan 2023 06:14 AM

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக காலண்டர் வழங்கி வரும் அரசு பள்ளி தலைமையாசிரியர்

திருவாரூர் மாவட்டம், பழையவலம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பழையவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த 69 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு 100 மாணவர்கள் பயின்ற பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது.

இதனால் கவலை அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி, வரும் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தினசரி காலண்டர் அச்சடித்து பழையவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார். இதன் மூலம் அரசுப் பள்ளியில் சேர்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளம்பரப்படுத்தி வருகிறார்.

அந்த காலண்டரானது ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி பெயரில்அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த காலண்டரில் தற்போது பயிலும் 69 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழு புகைப்படம் பிரதானமாக அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப்பள்ளியில் படிப்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் எனவும், அரசுப் பள்ளியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும் எனவும், அரசு பள்ளியில் படித்தால் அப்துல்கலாம் ஆகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் கலைவாணியின் இத்தகைய முயற்சி அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசுக்கும் பள்ளிக்கும் நன்றிகடன்: இதுகுறித்து தலைமை ஆசிரியர் கலைவாணி கூறியதாவது: கிராமங்களில் உள்ள பெற்றோர் வேனில் சென்று நகர்புறங்களில் உள்ள பள்ளிகளில் தமது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இந்த மாயைதான், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு காரணமாக உள்ளது. இதனை போக்க வேண்டுமெனில், அரசு பள்ளியில் படிப்பதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. அதனையும் பெற்றோர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அரசு பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவர்களையும் பெருமைப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இந்த புத்தாண்டை பயன்படுத்திக் கொண்டு எனது சொந்த செலவில் 600 காலண்டர்களை அச்சடித்து விநியோகித்துள்ளேன்.

பழையவலம் பள்ளியில் 1997-ல்பணியில் சேர்ந்தேன். அப்போது பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் மேல் இருந்தது. மீண்டும் இதே பள்ளிக்கு தலைமையாசிரியராக நான் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்தபோது 69 மாணவர்கள்தான் உள்ளனர் என்பது எனக்கு கவலையாக இருந்தது. எனக்கு முதலில் வேலை கொடுத்த இந்த பள்ளிக்கும், இந்த கிராம மக்களுக்கும், தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், அரசுக்கும் செய்கின்ற நன்றி கடனாகக் கருதி எனது சொந்த செலவில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்து வருகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x