Last Updated : 31 Jul, 2023 04:30 AM

 

Published : 31 Jul 2023 04:30 AM
Last Updated : 31 Jul 2023 04:30 AM

படிக்கறேன்... மறக்கறேன்... ரிப்பீட்டு…

"நல்லாதான் படிக்கறேன், மனப்பாடம் பண்றேன், பரிட்சைக்கு போறேன், கேள்வித் தாளைப் பார்க்கறேன், எழுதலாம்னு நினைக்கும்போது பதிலை மறந்திட்டு முழிக்கறேன்" என சில மாணவர்கள் சொல்லக் காரணம் என்ன?

நினைவில் கொண்டுள்ளவற்றை தக்க சமயத்தில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளாததே இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு நபருக்கும் நினைவாற்றல் திறனில் வேறுபாடு காணப்படும். பார்த்தவை, கேட்டவை, பேசியவை, படித்தவை, நம் மனதில் இருத்தியவை என எந்த ஒரு விஷயத்தையும், தேவைப்படும் சமயத்தில் ஒருவரால் எந்த அளவிற்கு விரைவாக வெளிக்கொண்டு வர முடிகிறதோ அந்த திறனையே நினைவாற்றல் என்கிறோம்.

நமக்கு பிடித்தவை, ஆர்வம் தருபவை, கவனம் ஈர்ப்பவை ஆகியவை பற்றி எப்போது கேட்டாலும், உடனே நம்மால் அவற்றை நினைவிற்கு கொண்டு வந்து சரியாக கூற இயலும்.ஆனால், நமக்கு விருப்பமில்லாதவை, நாம் ஆர்வமாய் கவனிக்காதவை, கட்டாயத்தினால் செய்தவை ஆகியவற்றை உடனடியாய் நம் கவனத்திற்குக் கொண்டு வர இயலாது.

படிப்பு என்பதை ஒரு சுமையாகக் கருதும் மாணவர்கள், படிப்பின் மீதுஆர்வமில்லாத மாணவர்கள் போன்றோர் தான் இத்தகைய மறதி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.அவ்வாறாயின் இதனை எவ்வாறு சரி செய்யலாம்?

நமக்கு மிகவும் பிடித்த அல்லது ஆர்வமூட்டக்கூடிய விஷயங்களை நினைவில் வைத்திருக்க எந்த விதமான பயிற்சியும் தேவையில்லை. அதீத ஆர்வம் மட்டுமே, நினைவாற்றலை அதிகப்படுத்திவிடும். ஆனால் ஆர்வமில்லாத ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் எனில் அதற்கு நம் மூளைக்கு சில பயிற்சிகள் தரப்பட வேண்டும்.

அவை என்ன பயிற்சிகள்? - தொடர்புபடுத்திப் படித்தல் - எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமோ அந்த தகவலை, நமக்குப் பிடித்த வேறோரு தகவலுடன் தொடர்புபடுத்தி மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

படக்காட்சியாக கற்பனை செய்தல் - படிக்க வேண்டிய விஷயத்தை, இயந்திரத்தனமாய் படிக்காமல், அதை ஒரு படக்காட்சியாய் மனதில் கற்பனை செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

எழுதிப் பார்த்தல் - நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவற்றை இரண்டு அல்லது மூன்று முறை எழுதிப்பார்த்து, அதனை மனதில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறுவயதிலிருந்தே, படிக்கும் போதெல்லாம் மேற்கூறிய வகையில் பயிற்சி அளித்து விட்டால், எந்த விஷயத்தையும், எந்த காலத்திலும் அவர்களால் நினைவில் இறுத்தி வைத்துக் கொள்ள இயலும். அதன் பிறகு, மறதி என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலே இருக்காது.

ஆர்வமின்மை மட்டும்தான் மறதிக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? கவனக்குறைவு, இயந்திரத்தனமான செயல்பாடு, பதட்டம், தூக்கமின்மை, அதிகப்படியான உழைப்பு, பயம், சஞ்சலமான மனநிலை போன்றவையும் மறதிக்கு காரணமாக உள்ளன.

எவ்வாறு போக்கலாம்? - கவனிக்கும் திறனை அதிகப்படுத்தக் கூடிய சில விளையாட்டுக்கள் உள்ளன.அவற்றை விளையாடச் செய்வதன் மூலம் நினைவாற்றலை வளர்க்க இயலும். உதாரணமாக குறுக்கெழுத்து புதிர்கள், மூளைக்கு வேலை, சொல் விளையாட்டு, ஜிக்ஸா பசில்ஸ் எனஅழைக்கப்படும் வெட்டப்பட்ட துண்டுகளை சரியாக பொருத்துதல், 20 பொருட்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு கண்களை மூடிக் கொண்டு அவற்றை நினைவுபடுத்தி சொல்ல முயற்சித்தல் போன்ற விளையாட்டுகள் மூலம் தொடர் பயிற்சி அளித்தால் மறதியை மறந்து போகச் செய்ய இயலும்.

மொத்தத்தில் நினைவாற்றலை வளர்க்க முயற்சியும், பயிற்சியும் அவசியம் என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டியது மிக முக்கியமாகும். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் உச்சத்தை எட்டலாம்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலப் பள்ளி துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x