Published : 03 Nov 2022 06:16 AM
Last Updated : 03 Nov 2022 06:16 AM
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று டெல்லி அரசு கோரியது. மேலும், பட்டாசு வெடித்தால் அபராதம் சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி தீபாவளி யன்று பட்டாசுகளை மக்கள் வெடித்தனர். இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது. காற்றின் தரக்குறியீடும் மோசமடைந்தது. மேலும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோல் போர்களை எரிப்பதாலும் டெல்லியில் காற்று மாசு பத்து சதவீதம் அதிகரித்துள்ளது. சாலைகளில் புகைமூட்டம் போல காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதைத் தவிர்க்க இயந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்து பணி: இந்நிலையில், டெல்லி சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். தனிப்பட்ட வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தர பிரதேசம், அரியானாவிலும் செயல் படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது. டெல்லி அரசு மீது பழி போடுகிறது. அரசு மட்டுமே காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாது. கடுமையான சட்டங்கள் மூலம் எந்தத் தவறையும் தடுக்க முடியாது.சுற்றுச் சூழலைக் காக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT