Published : 19 Sep 2022 06:06 AM
Last Updated : 19 Sep 2022 06:06 AM
சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2007-ம் ஆண்டுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரப் பட்டியலை சேகரிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை பணி முறிவு இல்லாமல் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களது வருகைப் பதிவேடு மூலம் இதை உறுதிசெய்து, அதன்பிறகு பரிந்துரை செய்ய வேண்டும். எனினும், கரோனா பரவல் காலத்தில் பள்ளிக்கு வராமல் இருந்து தற்போது பணியாற்றி வருபவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யலாம்.
இந்த விவரப் பட்டியலை அறிக்கையாக தயாரித்து, இயக்குநரகத்துக்கு செப்டம்பர் 23-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே முழு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் தகுதிப் பட்டியல் சேகரிக்கப்படுவது, கல்வித் துறை வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT