Published : 13 Sep 2022 06:45 AM
Last Updated : 13 Sep 2022 06:45 AM

ஆசிய கோப்பையை நாட்டுக்காக அர்ப்பணிக்கிறோம்: இலங்கை கேப்டன் தசன் ஷனகா கருத்து

ஆசிய கோப்பையுடன் இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா.

துபாய் : ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியின் கேப்டன்தசன் ஷனகா இந்த வெற்றியை நாட்டுக்காக அர்ப் பணிப்பதாக தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில்6 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார். ஹசரங்கா 36, தனஞ்ஜெயா 28 ரன்கள் சேர்த்தனர்.

171 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 55, இப்திகார் அகமது32 ரன்கள் சேர்த்தனர். இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4, ஹசரங்கா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பனுகா ராஜபக்ச தேர்வானார்.

வெற்றி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா கூறும்போது, “அணியில்உள்ள வீரர்கள் கடந்த 2 முதல் 3 வருடங்களாகவே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது இலங்கை கிரிக்கெட்டுக்கு நல்ல திருப்பமாக இருக்கும். பெரும்பாலான வீரர்கள் 5 முதல் 6 வருடங்கள் தொடர்ந்து விளையாடக்கூடியவர்கள். இது அணியின் முன்னேற்றத்துக்கு சிறந்த அறிகுறி.

நாங்கள் கோப்பையை வெல்வதற்காக இலங்கை ரசிகர்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். இந்த வெற்றியை ஒட்டுமொத்த நாட்டுக்கும் அர்ப்பணிக்கிறோம். டி 20 உலகக் கோப்பையில் நாங்கள் தகுதி சுற்றில் விளையாட உள்ளோம். இதன் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஆசிய கோப்பையை வென்றுள்ளது உலகக் கோப்பையில் முன்னேற்றம் காண உதவும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x