Published : 24 Aug 2022 08:44 AM
Last Updated : 24 Aug 2022 08:44 AM

நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கும் மாணவர்கள் - பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போகுமா?

சென்னை

நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாகி வருவதால் பொறியியல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நாளை (வியாழக்கிழமை) தொடங்குமா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் 1.48 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 11,905 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதில்1 லட்சத்து 58,157 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தரவரிசை பட்டியல்

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் ஆகஸ்டு 16-ம் தேதி வெளியிட்டார். அதில் 133 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அவர்களில் விழுப்புரம் அரசு பள்ளி மாணவி பி.பிருந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதிவரை நடைபெறும் என்றும் பொதுபிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர்21-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. பொதுவாகபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் கணிசமானோர் மருத்துவ படிப்புக்கும் விண்ணப்பிப்பது வழக்கம். பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைத்தவர்களில் மருத்து படிப்பிலும் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேரவே விரும்புவார்கள். இதனால், பொறியியல் படிப்பில் காலியாகும் இடங்கள் நிரப்பப்படாமலேயே போய்விடும். இந்நிலையை தவிர்க்கும் வகையில், முதல்முறையாக இந்தஆண்டு புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவர்கள் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கான சேர்க்கை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

நீட் தேர்வு முடிவு தாமதம்

இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை ஆகஸ்டு 25-ம் தேதி முதல் நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்தது.அதன் அடிப்படையில், ஏற்கெனவே அறிவித்தபடி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கி இன்று (24-ம் தேதி) முடிவடைகிறது. பொது கலந்தாய்வு நாளை தொடங்க வேண்டும். இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால், நாளை (25-ம் தேதி) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மேலும் சில நாட்கள்தள்ளிப்போகலாம் என தொழில்நுட்பக்கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிர ஆலோசனை

இதுகுறித்து தொழில்நுட்ப கல்விஇயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பொறியியல் கலந்தாய்வு தேதி ஏற்கெனவே ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது, நீட் தேர்வு முடிவு வெளியாகும் தேதி தள்ளிப்போவதால் பொறியியல் கலந்தாய்வு தேதியை தள்ளி வைக்கலாமா அல்லது ஏற்கெனவே திட்டமிட்டபடி 25-ம்தேதியே தொடங்கலாமா என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம். மேலும், கலந்தாய்வு மூலம்இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள்சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 7-ம் தேதி என நிர்ணயிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக அரசிடம் கலந்தாலோசனை செய்துஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறும்போது, “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு ஆகஸ்டு கடைசியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே, பொறியியல் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 14,524 மாணவர்களுக்கு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x