Published : 23 Aug 2022 12:31 PM
Last Updated : 23 Aug 2022 12:31 PM
தொழில்துறையில் நவீன தொழில்நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான என்எஸ்ஏஎம் பரிந்துரைகளை உயர்கல்வியில் புகுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூடுதல் உற்பத்திக்கான தேசிய திட்டம் (என்எஸ்ஏஎம்) வெளியிடப்பட்டது. இதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்க முடியாமல் இருக்கும் உள்ளூர் தொழிற்சாலைகளின் இயலாமையை சரி செய்து, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உற்பத்தியை அடைவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டிய முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குறித்த அறிவியல் தகவமைப்பை தனியார், அரசு பங்களிப்பில் மேற்கொள்ளுதல் போன்ற வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத் அபியான் போன்ற கோட்பாடுகளை முன்வைத்து சுயசார்பான இந்தியாவை மாநில அரசுகள், தொழில்துறையினர் மற்றும் பிற பங்களிப்பாளர்கள் உதவியுடன் உருவாக்க என்எஸ்ஏஎம் உதவுகிறது.இதில் உள்ள பரிந்துரைகளை சரியான நிகழ்ச்சி மற்றும் திட்டங்கள் மூலம் உயர்கல்வியில் புகுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT