Published : 16 Aug 2022 06:04 AM
Last Updated : 16 Aug 2022 06:04 AM
சென்னை: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்று பிரின்ஸ் பள்ளி விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்
சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரின்ஸ் வாரி மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் கலை, அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதன் நிறைவு விழா மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கே.பி.லத்தா வரவேற்றார்.
இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கும், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பிரின்ஸ் பள்ளி சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கிப் பேசுகையில், "மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைக் காட்டிலும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக கற்றுத் தர வேண்டும்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். பின்னர் அதற்கான காப்புரிமையையும் பெற வேண்டும். அரசுப் பள்ளிகளை பெருமையாகக் கருதும் நிலையை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.
இவ்விழாவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னைமாநிலக் கல்லூரி முதல்வர் ஆர்.ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT