Published : 10 Aug 2022 06:46 AM
Last Updated : 10 Aug 2022 06:46 AM
சென்னை: காலத்திற்கேற்றவாறும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ள பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி, பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கல்வியாளர்கள், மனிதவள நிபுணர்கள், பொறியியல் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தலா 10 பேர் என மொத்தம் 90 பேர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
காலத்திற்கேற்ப குறிப்பாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பொறியியல் பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக இக்குழுவினர் விரிவான விவாதம்நடத்தினர். பின்னர் பல்வேறு கட்டங்களாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்துதற்போதைய தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளுக்கு தேவையான மனிதவளம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வித் துறைக்கு பல பரிந்துரைகளை மேற்கண்ட குழு வழங்கியுள்ளது.
அதன்படி, புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, “காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளபொறியியல் பாடத்திட்டங்கள் விரைவில்வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதற்கு அண்ணா பல்கலைக் கழக கல்விக் குழுவிடம் வரும் 12-ம் தேதி ஒப்புதல் பெறப்பட்டு, வரும் 18-ம் தேதி புதிய பாடத்திட்டங்களை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT