Published : 29 Jul 2022 06:13 AM
Last Updated : 29 Jul 2022 06:13 AM

கல்வி உதவித்தொகை பெற உதவும் திறனாய்வுத் தேர்வுகள்: பள்ளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகளை வழங்குகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களின் உதவித் தொகைக்காக 3 விதமான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அவை தேசிய திறனாய்வுத்தேர்வு (National Talent Search Exam), தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு (National Means cum Merit Scholarship), ஊரக திறனாய்வுத்தேர்வு (TRUST) ஆகும்.

தேசிய திறனாய்வுத்தேர்வு

தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி) வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.

இத்தேர்வை 10-ம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி என எந்த வகை பள்ளி என்றாலும் பரவாயில்லை. 9-ம் வகுப்பு முழு பாடத் திட்டத்திலும், 10-ம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத் திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்பட புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இத்தேர்வின் சிறப்பம்சம் ஆகும். தேசிய திறனாய்வுத் தேர்வு தேர்ச்சி தகுதி, சர்வதேச பல்கலைக்கழகங்களில் சேர ஒரு முக்கிய தகுதியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய வருவாய் மற்றும் திறன் கல்வி உதவித்தொகை தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும்.

மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 7-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எனில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பொருத்தவரையில், 7-ம் வகுப்பு முழு பாடத்திட்டமும், 8-ம் வகுப்பில் காலாண்டு தேர்வு வரையிலான பாடத்திட்டமும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. ஒரே தேர்வுதான். தமிழக அரசு இந்த தேர்வை நடத்துகிறது. இதில் வெற்றிபெறும் 6,695 பேர் மாதம் ரூ.500 உதவித்தொகையை பிளஸ்-2 வரை பெறலாம்.

ஊரக திறனாய்வுத் தேர்வு

இந்த தேர்வு "டிரஸ்ட்" தேர்வு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இதில் தேர்ச்சி பெற்றால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாதம்ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான திறனாய்வுத் தேர்வுகள் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x