Published : 18 Jul 2022 06:06 AM
Last Updated : 18 Jul 2022 06:06 AM
திருவாரூர்: திருவாரூரில் தந்தை, மகன் இருவரும் ஒன்றாக நீட் தேர்வு எழுதியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையங்களில் 1,429பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.தேர்வு எழுத வந்தமாணவ, மாணவிகளை விதிமுறைகளின்படி பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
இதில், திருவாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையத்தில் தந்தை மகன் இருவரும் ஆர்வமுடன் தேர்வு எழுத வந்தது வியப்பில் ஆழ்த்தியது.
திருத்துறைப்பூண்டி வேளூர் பகுதியைச் சேர்ந்த காத்தையன் (வயது 50). பிளஸ் 2 வரை படித்துள்ளார். பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் திருவாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.
அதேபோல, பி.எஸ்.சி தாவரவியல் 2-ம் ஆண்டுபடித்து வரும் அவரது மகன் குமரனும் அதே மையத்தில் 2-வது முறையாக நீட் தேர்வு எழுதினார்.
இதுகுறித்து காத்தையன் கூறும்போது, "நீட் தேர்வு எழுத வீட்டில் இருந்து படித்தே சிறப்பாக தயார் படுத்திக்கொண்டேன். இந்த நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றிபெறுவேன். நான் டாக்டராக வேண்டும் என்பது என் தாய், தந்தையின் கனவு.
அதை நிறைவேற்ற கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பாக நீட் தேர்வை நான் கருதுகிறேன்" என்றார். காத்தையன் 1992-ம் ஆண்டு கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT