Published : 11 Jul 2022 06:09 AM
Last Updated : 11 Jul 2022 06:09 AM

பள்ளி வாகன தரத்தை ஆய்வு செய்யும் பணி: ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

சென்னை: பள்ளி வாகனங்கள் தரம் குறித்தஆய்வுப் பணிகளை வரும் 31-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு முன்னதாகவே வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வை போக்குவரத்துத் துறை தொடங்கியது.

இதில் குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், அந்த வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: நிகழ் கல்வியாண்டு தொடக்கத்துக்கு முன்பு பள்ளி வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையைநீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா?ஓட்டுநர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டுஉள்ளதா?, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?,ஜிபிஎஸ் கருவியுடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்தப் பணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ளன. எஞ்சிய பணிகளை முடித்து ஜூலை 31-க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வு செய்யப்படாத வாகனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x