Published : 03 Mar 2021 03:25 AM
Last Updated : 03 Mar 2021 03:25 AM
கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை நகர்புற ஊரமைப்புத் துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் `கோவிட் தொற்றுக்குப் பிந்தைய உலகத்துக்கு கல்வி நிறுவனங்களை தயார்படுத்துதல்' குறித்த கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிபிஎஸ்இ ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் இவ்விழா நடைபெற்றது.
விழாவின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டியிடும் மனப்பான்மையை பாதிக்கும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.
ஏற்கெனவே பள்ளிகள் நிதிச்சுமையால் தவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முன்வர மாட்டார்கள். இதனால் பள்ளிகள் மேலும் பல பாதிப்புகளை சந்திக்கும். தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஆலோசனை குழுக்களை அமைத்து அதில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் டி.சி.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT