Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
சென்னை, பல்லாவரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 120 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி உரிமையாளர்களிடம் வழங்கினார்.
பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கிராமங்களில் எங்கெல்லாம் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லையோ அங்கு 2,000 மினிகிளினிக்களை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி குளங்களை சீர் செய்ததால், மழை வெள்ளசேதம் இல்லாமல் காப்பற்றப்பட்டிருக்கிறது.
தற்போது அனைத்து துறையிலும் தமிழகம் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.375 கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. 7,200 பள்ளிகளிக்கு ஸ்மார்ட்வகுப்பு, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, 6 முதல் 8-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டேப் வழங்கப்பட உள்ளன. இதுவரை 2,005 மெட்ரிக் பள்ளிகளுக்கும், 2,900 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT