Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM
பள்ளிகளை திறக்க அரசு எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது. பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல்,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இனி வரும் காலங்களில் வரதராஜபுரத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் அடையாறு கரையோரம் உள்ள கால்வாய்கள் ரூ.71 கோடி செலவில் சீரமைக்கப்படும். அந்தப் பகுதியில் தேங்கி நிற்கும்மழைநீரை வெளியேற்ற அரசு முயற்சித்து வருகிறது. பாதிகப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
பள்ளிகள் திறப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பள்ளிகளை திறக்க அரசு எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்துகளை கேட்ட பின்னரே அரசு பள்ளிகளை திறக்கும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, பெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)நாராயணனன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT